பெங்களூரு:பள்ளி சென்று கொண்டிருந்த, 10 வயது சிறுமியை, உயிருடன் எரிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள, பில்லிகானஹள்ளியை சேர்ந்த கார் டிரைவர் வெங்கடேஷ் மகள் கவிதா,10. இவள், தன் தங்கை காவ்யா,8, உடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். அப்போது, திடீரென காரில் வந்த நான்கு பேர், கவிதாவை தனியே அழைத்துச் சென்றனர்.திடீரென, அவள் மீது கெரசினை ஊற்றி, கொளுத்தி விட்டுத் தப்பிச் சென்றனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, நான்கு பேரும் கைக்குட்டையால் முகத்தை மறைத்திருந்தனர்.
தீப்பிடித்து எரிந்த நிலையில், வீட்டை நோக்கி ஓடி வந்த கவிதாவைக் கண்ட அவரது தந்தை வெங்கடேஷ் அதிர்ச்சியடைந்தார். தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். அருகிலுள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். பின் மேல் சிகிச்சைக்காக, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கவிதா சேர்க்கப்பட்டார். கவிதாவின் உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |