நாராயணன் வாடகைக் காரில் செல்லுமளவுக்கு சார்க் மாநாட்டின் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பெருமிதம்
August 6, 2008
வாடகை வாகனத்தில் செல்லும் அளவிற்கு 15ஆவது சார்க் மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எமக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சார்க் மாநாட்டின் பாதுகாப்பு, ஆசன ஒதுக்கீடுகள் மற்றும் செலவுகள் தொடர்பில் சபையில் இன்று எழுந்த சர்ச்சையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச மாநாடுகளை நடத்துகின்ற போது சிறு சிறு தவறுகள் இடம்பெறும்.
எனினும், 15 ஆவது சார்க் மாநாட்டிற்காக வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன், வாடகை வாகனத்தில் செல்லுமளவிற்கு சார்க் மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது குறித்து நாராயணன் எமக்கு நற்சான்றிதழ் பத்திரத்தை வழங்கியுள்ளார் என்றார். இதன்போது குறுக்கிட்ட தயாசிறி ஜயசேகர எம்.பி. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான நாராயணனை பாதுகாப்பல்ல “தெய்வமே’ காப்பாற்றியுள்ளது என்றார்.


<<<முன்னைய பக்கம்